Tuesday, August 3, 2010

குரு

குரு என்பவர் நடை முறையில் 
இரு வகையாக பிரிக்கப் படுகிறார்.
காரிய குரு, காரண குரு.
ஞானத்தை தேடுபவர்கள் 
வாழ்வியலில் உள்ள உலகியல் குருக்களை 
விடுத்து சூக்குமமாய் உள்ள ஆன்மா குருவை
சரண் அடைந்தால்
அந்த ஆன்மா குரு நமக்கு
உண்மை வழியை காட்டுவார்.
வாழ்வியலில் உள்ள குருக்களின் அனுபவங்கள்
மாயை வயப்பட்டது. ஏனென்றால் வாழ்வியலில்
உள்ளவர்கள் முழு ஞானத்தை அடைவது என்பது
மிகப்பெரிய சவால்.
அப்படி வாழ்வியலில் உள்ள உண்மை குருவின் தன்மை
உலக விஷங்களை நாடாது.
அவருடைய அறிவு ஆன்மா அறிவாக இருக்கும்.
ஆகவே நாம் ஞான பாதையில் முன்னேற
சரியான குரு சூக்கும நிலையில் உள்ள
ஆன்மா அறிவென்னும் குருவாகும்.
அதே போல் வாழ்வியல் குருக்களின் 
அனுபவங்கள் நமக்கு பாடமாக அமைவதை விட
நமக்கு அந்த அனுபவம் ஏற்படவில்லையே என்று
நமக்கு நம் மீது நம்பிக்கை இன்மையை ஏற்படுத்தி விடும்.
நமது அனுபவத்தை மற்றவரின் அனுபவத்தோடு ஒப்பிட்டு பார்த்து
அவரின் அனுபவம் எனக்கு ஏற்பட வில்லையே என்று
நம்மை வழி திருப்பி விட்டுவிட வாய்ப்பு உள்ளது.
ஆகவே ஒவ்வொருவரும் நம்மிடம் சூக்குமம் ஆக உள்ள ஆன்மா அறிவின் துணை கொண்டு ஞான அனுபவத்தை பெற முயல்வோம்.

Saturday, July 24, 2010

வேதாத்திரி மகரிஷி


சென்னை அருகே கூடுவாஞ்சேரியில் ஏழை குடும்பத்தில் பிறந்தவர் வேதாத்திரி மகரிஷி. இவரது தந்தைப் பெயர் வரதப்பன். தாயார் பெயர் சின்னம்மாள்.நெசவுத் தொழிலை செய்து குடும்பம் நடத்தி வந்தனர்.

சிறுவயது முதலே வேதாத்திரி மகரிஷி அவரது தாயார் சின்னம்மாளிடம் நிறைய பக்தி கதைகளையும், புராணக்கதைகளையும் அறிந்து கொண்டார். கதை கேட்கும் போதே சிறுவன் வேதாத்திரி தனக்கு ஏற்படும் சந்தேகங்களை கேள்விகளாக தாய் சின்னமாளிடம் கேட்பார். அவரது தாயாரும் சிறுவனின் கேள்விக்கு சளைக்காமல் பதில் கூறுவார்.

இத்தகைய கேள்வி ஞானமே பின்னாளில் இவரது தாரக மந்திரமாக விளங்கிய 'சொன்னால் மட்டும் நம்பாதே; சுயமாய்ச் சிந்தித்தே தெளிவாய்' உருவாவதற்கு காரணமாக விளங்கியது என்றே கூறலாம். இவரது குடும்பசூழல் இவருக்கு அதிகம் படிக்க வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது. தன்னுடைய சொந்த ஊரில் மூன்றாவது வகுப்புவரை படித்தவர், பின்னர் தங்கள் குடும்ப தொழிலான தறி நெய்தலை செய்யத் தொடங்கினார்.

இந்நிலையில் வேதாத்திரி மகரிஷிக்கு அவரது 7வது வயதில் அறிமுகமானார் பாலகிருஷ்ண நாயக்கர் என்பவர். அவரது சந்திப்பும், அவருடன் இவருக்கு ஏற்பட்ட பரிச்சயமும் இவரது வாழ்க்கை பாதையை மாற்றியது என்றே கூறலாம். ஆம் பாலகிருஷ்ண நாயக்கர் கூறிய அறிவுரையினால் மகரிஷி பஜனை பாடல்கள் மேல் ஆர்வம் கொண்டு அதனை கற்றார். வேலை நேரம் போக மற்ற நேரங்களில் நிறைய புத்தகங்கள் படிப்பது, பஜனை செய்வது என்று நாட்கள் ஓட, இவரின் 12 வது வயதில் இவருள் எழுந்த சிந்தனை, பல நூல்கள் உருவாக உதவின.

சென்னையை அடுத்துள்ள மாமல்லபுரத்திற்கு செல்லும் வாய்ப்பு இவருக்கு ஏற்பட, உணவு பழக்கமுறைகள் சம்மந்தப்பட்ட நூல் ஒன்றை வாங்கி படிக்கும் வாய்ப்பு கிட்ட, அதில் கூறப்பட்ட கருத்துகள் இவரின் மனதில் பாதிப்பை ஏற்படுத்தியது. அன்று முதல் மாமிச உணவுகளை உண்பதை கைவிட்டார் மகரிஷி.

இவரின் 18வது வயதில் சென்னையில் தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றும் வாய்ப்பு இவருக்கு ஏற்பட்டது. சென்னையில் இவருக்கு ஆயுர்வேத மருத்துவர் எஸ். கிருஷ்ணாராவின் நட்பு கிடைக்க, அவர் மூலமாக தியானம், யோகா போன்றவைகளை கற்றார் மகரிஷி.

இந்நிலையில் அவரின் 23வது வயதில் எதிர்பாராத பல சம்பவங்கள் இவர் வாழ்க்கையில் ஏற்பட்டன. தந்தை இறந்தவிட, சகோதரியின் மகள் லோகாம்பாளை திருமணம் செய்து கொண்டார். திருமணம் முடிந்து 8 ஆண்டுகள் ஆகியும் இவருக்கு குழந்தைகள் இல்லாததால், லோகாம்பாளின் சித்தி மகள் லட்சுமியை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார் மகரிஷி.

அவரது 34 வயதில் சென்னையில் பரஞ்ஜோதி மகானை சந்திக்கும் வாய்ப்பு மகரிஷிக்கு ஏற்பட்டது. அதற்கு பின்பே மெய்யுணர்வு தீட்சை எடுத்துக் கொண்டார் மகரிஷி. உலக சமாதான ஆலயக் குழுச் செயலராக இருந்த வேதாத்திரி, பரஞ்ஜோதி மகானுடன் இலங்கைக்கு அடிககடி செல்லும் வாய்ப்பு ஏற்பட்டது.

இந்நிலையில் இவரின் அலுவலகத்தில் சட்டத்துக்கு விரோதமாக மேலதிகாரி செயல்பட வலியுறுத்தியதால் தனது வேலையை ராஜினாமா செய்து தன்னுடைய லுங்கி வியாபாரத்தில் அதிக கவனம் செலுத்தினார்.

இவரின் இரண்டாவது மனைவிக்கும் குழந்தை பாக்கியம் இல்லாததால் இவரின் சகோதரரின் மூத்த மகளை தத்தெடுத்து கொண்டார். இதற்கிடையில் அவரின் 42வது வயதில் ஒரு பெளர்ணமி தினத்தன்று அருள்மிகு ராமலிங்க வள்ளளார் இவருக்கு அருள்காட்சி தந்தார். இந்த நிகழ்வே இவரை ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு கொள்ள வைத்தது எனலாம்.

கடந்த 1957ல் மகரிஷி 'உலக சமாதானம்' என்னும் நூல் ஒன்றை வெளியிட்டார். தொடர்ந்து பல்வேறு நாடுகளுக்கு செல்லும் வாய்ப்பு இவருக்கு கிட்ட அங்கெல்லாம் ஆன்மீக சொற்பொழிவு நிகழ்த்தினார்.

மகரிஷி தன்னுடைய 65வது வயதில் காயகல்ப பயிற்சி முறைகளை முறைப்படுத்தி பாடத் திட்டம் வகுத்தார். பின்னர் சென்னையிலும், ஆழியாற்றிலும் ஆசிரமங்களை நிறுவினார். காந்த தத்துவம், பிரம்மஞானத்தை விரிவாக விளக்கி புத்தகங்கள் பல எழுதினார்.

அதுமட்டுமல்லாமல் பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியாற்றில் சாந்தலட்சுமி மில்ஸ் நிர்வாகி சின்னசாமி, பொள்ளாச்சி நா. மகாலிங்கள் ஆகியோர் ஒத்துழைப்புடன் 'அருட்பெரும் ஜோதிநகர்' ஒன்றை உருவாக்கினார். மேலும் 'அன்பொளி' என்னும் ஆன்மீக இதழ் ஒன்றையும் வெளியிட்டார்.

MY GURU VETHATHIRI MAHARISHI

my guru vethathiri maharishi வாழ்வில் வெற்றி ஒளி வீசட்டும்

நெருப்பு சுடும். இது தான் இயல்பு எனினும் நெருப்பு நமது வாழ்வில் தவிர்க்க முடியாத தேவைப் பொருளாக இருக்கிறது. முறையோடும் அளவோடும் இடத்திற்கும் தேவைக்கும் ஏற்ப நெருப்பை பயன்படுத்தி வாழ்வில் பயன்பெறுகிறோம். உணவு சமைக்கும் போது அடுப்பின் மீது உள்ள பாத்திரத்தைக் கையால் எடுத்தாலும், தொட்டாலும் சுட்டு விடுகிறது. அதற்கு என்ன செய்கிறோம் அதை அப்படியே விட்டு விடுகிறோமா? ஒரு கந்தைத் துணியைக் கையில் பிடித்துக் கொண்டு அடுப்பின் மீது உள்ள பாத்திரத்தை நகர்த்துகிறோம், எடுக்கிறோம், பயன்பெறுகிறோம்.

இது போன்றே நாம் நமது வாழ்வில் கருத்து வேறுபாடு உடைய பலரோடு தொடர்பு கொள்ள வேண்டியுள்ளது. ஒவ்வொருவரும் தேவை, பழக்கம், சந்தர்ப்ப சூழ்நிலைகள், அறிவின் வளர்ச்சி என்ற நான்கு தவிர்க்க முடியாத நிர்ப்பந்த நிலைகளுக்கு உட்பட்டே வாழ்ந்து வருகின்றனர்.

இதனால் ஒருவரோடு ஒருவர் கருத்து வேறுபாடு கொள்வது இயல்பு. தவிர்க்க முடியாதது. இக்கருத்து வேறுபாடுகளில் மனதைச் சிக்க வைத்துக் கொண்டு உணர்ச்சி வயப்படுத்துகிறோம். தவறு செய்கிறோம். வருந்துகிறோம். மேலும் மேலும் வாழ்வில் சிக்கல்களைப் பெருக்கிக் கொள்கிறோம். மனிதன் தனித்து வாழ்வது முடியாது. கூடாது. இயன்ற மட்டும் எல்லோருடனும் அளவோடும், முறையோடும் பழகி வாழ்வில் நலம் பெற்று வெற்றிகாண வேண்டும்.

சூடுள்ள பாத்திரத்தைக் கந்தைக் துணி உதவி கொண்டோ, கொரடாவின் உதவி கொண்டோ அடுப்பிலிருந்து இறக்கிப் பயன் காண்பது போல, கருத்து வேறுபாடு உடையவர்களோடு மனநிலையுணர்ந்து, அன்பு காட்டல், பொறுமை கொள்ளுதல், கடமையுணர்ந்து ஆற்றல் எனும் மூன்றிணைப்புத்திறன் கொண்டு பழகி வாழ்வில் வெற்றியும், மகிழ்ச்சியும், அமைதியும் காண வேண்டும். இந்த முறையில் விழிப்போடு வாழ்வை நடத்தும்போது வெறுப்புணர்ச்சி என்ற தீமை அணுகாது. சினமும், கவலையும் எழாது. வளராது. வாழ்வில் நாளுக்கு நாள் அன்பும், இன்பமும், அமைதியும் ஓங்கும்.

அகத்தவம்

இயற்கையின் பரிணாமப் பூரிப்பில் உன்னதமான உடலையும் ஆறாவது அறிவு உட்பொருளாகவுள்ள உயிரையும் பெற்றுள்ளவன் மனிதன். இயற்கை வளங்களைக் கைத்திறனாலும் அறிவின் நுட்பத்தாலும் உருமாற்றி அழகுபடுத்தி அனுபவிக்கும் சிறப்புடைய வாழ்வு மனிதனுடையது. மனிதனுடைய வாழ்வே கலையாகத் தான் அமைந்திருக்கிறது. கலைத் திறன் கொண்ட மனித வாழ்வில், சிக்கலும், துன்பமும் விளையாமல் காத்து அமைதி நிலவச் செய்ய ஒழுக்கம், கடமை, ஈகை என்ற முக்கருத்து இணைப்பான அறம் வகுக்கப்பட்டது. அறநெறி வழுவாத வாழ்வு தான் மனித குலத்துக்கேற்றது. கலையும் அறமும் ஒன்றால் ஒன்று காக்கப்பட வேண்டும் என்ற உண்மையை உணர்த்தும் சிறப்புச் சொல் தான் கலாச்சாரம் ஆகும். ஆச்சாரம் என்பது அறநெறி.

இந்த அறநெறி வயதுக்கும் அறிவின் வளர்ச்சிக்கும் ஏற்ப இரண்டு பிரிவுகளாகக் கூறப்படுகிறது. ஒன்று இல்லறம், மற்றொன்று துறவறம். இருவகை அறங்களுக்கும் பயிற்சி முறைகள் உண்டு.

இல்லறத்துக்கேற்ற பயிற்சி முறை இளமை நோன்பு, துறவறத்துக்கேற்ற பயிற்சி முறை அகத்தவம் ஆகும். பயிற்சி முறைகளோடு சேர்ந்து இளமை நோன்பு, இல்லறம், அகத்தவம், தொண்டு என நான்கு வகை வாழ்க்கைப் பிரிவுகளாகக் கூறப்படுகின்றன. இவற்றை முறையே பிரம்மச்சரியம், கிரகஸ்தம், வானப்பிரஸ்தம், சன்யாசம் என்று வடநூலார் கூறுவர்.

அறம் என்பது பிறர் நலம் கெடாது தான் வாழ்ந்து கொண்டே கடமைகளை வழுவாமல் ஆற்றி அறிவின் முழுமையைப் பெறுதல் ஆகும். அவ்வாறாயின் இல்லறம், துறவறம் இரண்டுமே தொண்டு தான். ஒன்று பொருளீட்டிக் காத்துத் துய்த்து, பிறர்க்கிட்டு ஆற்றும் தொண்டு. இது தான் இல்லறம். உயிரறிந்து, அறிவறிந்து, உடலறிந்து, சமுதாய அமைப்புகளோடும் தொடர்பு கொண்டு தொண்டாற்றும் முறையே துறவறம் ஆகும். இந்த நான்கு ஆஸ்ரமங்களையும் பிரித்துத் தனித் தனியே அமைப்பாகக் காட்டியுள்ளார்கள் வடநூல் எழுதியவர்கள். இம்முறை வேத காலத்திற்கே பொருந்தும். ஆனால் தமிழ்நாட்டுத் தத்துவ ஞானியர்கள் இந்த நான்கு பிரிவுகளையும் ஒன்றி இணைந்து மனிதனுக்கேற்ற பொதுவான வாழ்க்கை நெறியாக்கி உள்ளார்கள். எழுத்தறிவு, தொழிலறிவு, இயற்கைத் தத்துவ அறிவு, ஒழுக்க பழக்கங்கள், இவற்றை இளமையிலேயே கற்க வேண்டுமென்றும், இந்த கல்வியை அடிப்படையாகக் கொண்ட குடும்பக் கடமைகளையும் ஏற்றுக் கொண்டு பொருளீட்டும் துறையிலும் ஈடுபட வேண்டும் என்றும், இல்லறம் ஆற்றும்போதே அகத்தவமும் குருவின் மூலம் பயின்று அறிவறிய வேண்டுமென்றும், அறிவறிந்த பேராண்மையினால் உடல் சமுதாயத்தால் ஆக்கவும், காக்கவும்படுகிற உண்மை உணர்வில் உழைப்பை சமுதாயத்திற்கும், அறிவு இறைநிலையின் கூறுதான் என்ற உணர்வில் அறிவை இறை நிலைக்கும் ஒப்புக் கொடுத்து விட்டு, தன்முனைப் பற்று சமுதாயத்திற்கே தனது வாழ்வு என்ற நிலையில் விரிந்த மனநிலையில் வாழ வேண்டுமென்றும், நான்கு பிரிவுகளையும் ஒன்றாகவே இணைத்து வாழ்வின் நடைமுறைக்கு ஒப்ப, எக்காலத்துக்கும், எந்த நாட்டுக்கும் ஒப்ப, வாழ்க்கை நெறியை வகுத்தார்கள். போதித்தார்கள், வாழ்ந்து காட்டினார்கள்.

இந்த நடைமுறை வழியிலே தான் நாம் நமது வாழ்வில் இல்லறத்தோடு அகத்தவம் ஆற்றி வருகிறோம். அகத்தவத்தின் பெருநோக்கம் தீய வினைப் பதிவுகளைக் களைந்து தூய்மை பெறுதல், அறிவை அறிதல், இறை நிலையுணர்தல், இறைநிலையே அறிவு எனத் தெளிதல், இறைநிலையே அறிவாக எல்லாப் பொருட்களிலும், உயிர்களிலும் நிறைந்து அகக்காட்சியாக இருக்கின்றதென்ற தெளிவில் எல்லா உயிர்களுக்கும் ஒத்தும் உதவியும் வாழ்தல் என்பதாகும்.


நெறிப்படும் பருவம்

மனித வாழ்வில் மாணவப்பருவம் மிக்க மதிப்புடையது. வயதுக்கும், அறிவுக்கும், கடமைக்கும் இணைப்புக் காட்டி முன்னோர்கள் மனிதனுடைய வாழ்வை நான்கு வகையில் பிரித்தார்கள். அவை

(1) இளமைநோன்பு

(2) இல்லறம்

(3) அகத்தவம்

(4) தொண்டு


என்பனவாகும்.

ஒன்றின்பின் ஒன்றாக முறையோடு இவற்றைப் பயிற்சி செய்வதற்காக வேறுபடுத்தியும், வரிசைப்படுத்தியும் பேசப்பட்டனவேயொழிய, வாழ்வில் பொறுப்பேற்ற ஒவ்வொருவருக்கும் இந்நான்கு பண்பாடுகளும் வாழ்வில் இணைந்தே செயலாக வேண்டும்.

மேலே விளக்கிய நான்கு பிரிவுகளில் இளமை நோன்பு என்ற ஒன்றைப் பயிலும் காலம்தான் மாணவப்பருவம் மனிதன் சிறப்புற, வாழ்வில் வளம்பெற இன்றியமையாத பருவமே எற்றதோர் பயிற்சிக்காலம்.

நல்வாழ்வின் இன்றியமையாத தேவைகளான

(1) எழுத்தறிவு

(2) தொழிலறிவு

(3) இயற்கை தத்துவ அறிவு

(4) ஒழுக்க பழக்கங்கள்

என்ற நான்கும் இணைந்த கல்வியே முழுக்கல்வியாகும். இவற்றைப் பயின்று கொள்ளவேண்டிய பொருத்தமான, இன்றியமையாத காலம் மாணவப் பருவமே. எழுத்தறிவு, தொழிலறிவு இரண்டும் இன்று விரிவாக எல்லாப் பள்ளிகளிலும் கல்வி முறையில் பாடத்திட்டங்களாக கற்றுத்தரப்படுகின்றன. இயற்கைத் தத்துவ அறிவும் செம்மையான வாழ்வுக்கு ஏற்ற ஒழுக்க பழக்கங்களும் அகத்தவத்தாலன்றிக் கிட்டாது. மாணவர்களுக்குப் படிப்பில் மனம் நிலைக்க, ஒவ்வொரு துறையிலும் ஆழ்ந்து பொருள் உணர, அவற்றை நினைவிலே வைத்துக்கொள்ள, போதிய மனவலுவு, கூர்மை, நுண்மை ஆகிய இவை அகத்தவம் (தியானம்) என்ற உளப்பயிற்சியினால்தான் கிடைக்கிறது.

உடல், உயிர், மனம், மெய்ப்பொருள் இந்நான்கின் நிலைகளையும் இவை ஒன்றோடொன்று இணைந்த உறவுகளையும் தெளிவாகத் தெரிந்துகொள்ளும்போதுதான் ஒருவர் விஞ்ஞானம் கல்வியில் எந்தப் பகுதியிலும் சிறந்து விளங்க முடியும். பொருளியல், உயிரியல், உளவியல், கருவியியல், சமூக இயல் அகிய விஞ்ஞானங்கள் வேறு வேறாகத் தோன்றிய போதிலும் உண்மையில் இவை எல்லாவற்றிலும் ஊடுறுவிய தொடர்பு இருக்கிறது. இக்கல்விகளில் ஆழ்ந்து பொருளுணர்ந்து கருத்தோடும், பொறுப்போடும் கல்வியில் தேர்ச்சிபெற அகத்தவப்பயிற்சி இன்றியமையாத் துணையாகும். மேலும் மனிதனிடம் அடங்கியுள்ள ஆற்றல்களை முறைப்படுத்தவேண்டுமாயின் இளமைநோன்புக் காலமாகிய மாணவப்பருவம்தான் சிறந்தது அறிவு ஆற்றல் சிதறாமல், செயல்கள் நெறி பிறழாமல் ஒன்றோடொன்று இணைந்து சிறப்புற மாணவப் பருவத்திலேயே பயிற்சி செய்துகொள்ள வேண்டும்.

இப்பருவத்தை நழுவ விட்டால் தேவையற்ற துன்பமும், சிக்கலும் விளைவிக்கத்தக்க எண்ணங்களும், செயல்களும் இடம் பிடித்துக்கொள்ளும். பிற்காலத்தில் இவற்றை மாற்றி ஒழுங்குபடுத்தி நலம் காண்பதில் மிகுதியான முயற்சி எடுக்க வேண்டும். ஏனெனில் பழக்கமாகிவிட்ட எண்ணங்களையும், செயல்களையும் மாற்றியமைப்பது என்பது மிகக்கடினம். எனவே மாணவப் பருவத்தில் நல்ல எதிர்காலத்தை உருவாக்கும் ஒவ்வொரு மனிதனும் சிறந்த ஆற்றலுள்ள நல்லதோர் நிதியாகத் திகழ வேண்டும் என்றால் மாணவப்பருவத்திலேதான் மனவளக்கல்வி இடம் பெறவேண்டும்.

ஒரு மனிதன் நற்பண்போடு வாழ்வில் சிறந்து விளங்கினால் உலகிற்கு, ஆயிரமாயிரம் மக்களுக்கு நலம் விளைக்கும் பெருநிதியாகத் திகழ்கிறான். இதே போன்று பருவத்தை நழுவவிட்டு புலன் வழியே சென்ற சூழ்நிலைக் கவர்ச்சிகளால் தேவையற்ற எண்ணங்களும், செயல்களும் இளம்வயதில் ஒருவரிடம் பதிந்து விட்டால் சமுதாய நலனையே அழிக்கக்கூடிய நச்சு ஆகிவிடுகிறது. மாணவப் பருவத்தில் அகத்தவம் பயின்று மனத்தூய்மையும், வினைத்தூய்மையும் பெறும்போது கல்வி நிலையங்களில் எவ்வகைக் குழப்பங்களும் ஏற்படாது. இதன் தொடர்விளைவாகத் தொழிற்சாலைகளிலும் அலுவலகங்களிலும் திறமை மிகும் அமைதி நிலவும் சமுதாயத்தில் பெரும்பாலான மக்கள் இவ்வாறு வாழ்வின் நெறியுணர்ந்து வாழ்ந்தால் சமுதாயத்தில் அரசியல் சிறப்புறும், பொருளாதாரம் வளம்பெறும்.

எழுத்தறிவு, தொழிலறிவு, இரண்டை மட்டும் வளர்த்துக் கொண்டு இயற்கை தத்துவம், ஒழுக்க பழக்கங்கள் இவற்றை அலட்சியம் செய்துவிட்டால் மனித சமுதாயத்தின் இன்ப ஊற்றே நச்சு ஆகிவிடும். வறண்டுபோகும். மாணவப்பருத்தில் அகத்தவம் புகுத்துவதற்கு மாணவர்கள் மட்டும் முயன்றால் போதாது, பெற்றோர்கள், மதத் தலைவர்கள், சமுதாய நல நோக்கமுடையவர்கள், ஆட்சித் தலைவர்கள், தத்துவஞானிகள், விஞ்ஞானிகள் அனைவருமே கூட்டுப்பொறுப்பு ஏற்க வேண்டும். இந்த பெரு நோக்கத்தோடு சிந்தனை ஆற்றல் மிக்க சமுதாய நலநோக்கமுள்ள அனைவருமே மனித குல நலப்பொறுப்பை ஏற்றுக் கொள்வோம்.

கணவன் மனைவிக்கு அறிவுரை

குடும்பம் என்பது வாழ்க்கைக் கலைகள் அனைத்தையும் கற்க ஏற்ற ஓர் சர்வ கலாசாலையாகும். குடும்பத்தில் ஒழுங்கும் அமைதியும் நிலவ முதலில் முயலுங்கள். இந்த வெற்றி நீங்கள் போகும் இடங்களிளெல்லாம் இனிமை தரும் அலைகளாகப் பயன் தரும்.

கணவன் மனைவி உறவில் அன்பும் ஒற்றுமையும் திகழ உங்கள் முயற்சியெல்லாம் முழுமையாகப் பயனாகட்டும். இதன் விளைவு உங்கள் குழந்தைகள் வாழ்வில் பல நலன்களை விளைவிக்கும். குழந்தைகள் எதிரில் கணவன் மனைவிக்கிடையே ஒருவரை மற்றவர் மதிப்பளித்துப் பேசுங்கள். குழந்தைகள் உங்கள் இருவருக்கும் மதிப்புத்தருவார்கள். அவர்கள் வாழ்விலும் ஒழுக்கம் உயரும். குழந்தைகள் மத்தியில் தம்பதிகள் சண்டையிடுவதோ, ஒருவரை ஒருவர் மதிப்பில்லாமல் பேசுவதோ இழித்துக் கூறுவதோ, தீய பதிவுகளை அக்குழந்தைகள் மனதில் ஏற்படுத்தி விடும்.

தன்னடக்கம், பண்பாடு இல்லாத தம்பதிகள், ஒழுக்கம் மேன்மையும் உடைய மக்களைப் பெற முடியாது. மக்கள் செல்வம் குடும்பத்துக்கும், ஊருக்கும், நாட்டுக்கும், உலகுக்கும் நலம் பயக்க வல்லது. அச்செல்வத்தைப் போற்றிக் காப்பது இல்லறத்தாரின் முக்கியமான கடமையாகும்.

நன்மைகளையெல்லாம் அடைய வேண்டுமென்பது நல்ல விருப்பம்தான். ஆனால் தீமைகளை ஒழிக்கவில்லையானால் எப்படி நன்மைகள் கிடைக்கும், நிலைக்கும்? என்ன நலன் வேண்டுமோ அந்த நலம் பெற ஏற்ற செயல்களைப் பின்பற்றுங்கள், விளைவு நிச்சயம்.

அவசியமின்றி தலையிடாதீர்

ஒரு குடும்பத்தில் வயதில் மூத்த பாட்டனார், பாட்டி, அன்னை, தந்தை, அண்ணன் என்ற பொறுப்புடையவர்கள் அவ்வீட்டில் உள்ள குழந்தை தவறு செய்யாமல் வாழ்க்கை அனுபவம் பெற கண்காணித்து, புத்தி கூறி, அடிக்கடி விழிப்பூட்டி வழி நடத்துவது இயல்பு, நன்மையும் கூட.

அதே குழந்தை வளர்ந்து வயது 16, 20 ஆன பிறகும் பழக்கத்தாலேயே தனக்கு அடங்கி நடக்க வேண்டும் என்ற மனநிலையில் எப்போதும் எல்லாச் செயல்களையும் கண்காணித்துக் கொண்டேயிருப்பதும், தேவையில்லாதபோது கூட, புத்தி கூறிக் கொண்டிருப்பதும் வெறுப்புணர்ச்சியையே ஊட்டும்.

பெரியவர்களுக்கு காப்பு உணர்வு, சிறியவர்களுக்கு அது தடையுணர்வு, காப்புணர்வு, அவனுக்கும் அறிவு இருக்கிறது, பொறுப்பு இருக்கிறது, திறமை இருக்கிறது என்பதை நம்பி அவர்கள் செயல்களில், வாழ்வில் அவசியமின்றி தலையிடாது இருப்பது இனிமையளிக்கும்.

உணர்ந்தால் தெளிவு

உடல் ஜீரணிக்கிற அளவுக்கு மேலே எப்போதும் யாரும் உணவுண்டதே கிடையாது, அது முடியவும் முடியாது. அதிகமாக உண்டால் தொல்லைதான் விளைவாக வரும். அது போன்றே உடல் சுமக்கும் அளவுக்கு மேலே உடைகளைப் போட்டுக் கொள்ள முடியுமா? நின்றால் காலளவு. படுத்தால் உடலளவு. இதற்குமேல் பூமியை யாரும் அனுபவிக்கிறதில்லை. உண்மையிலேயே நாம் எல்லோருமே ஞானிகளாக, அனைத்தையும் துறந்தவர்களாக, தியாகிகளாகத் தான் இருக்கிறோம். அப்படி ஏதேனும் பொருள் சேர்த்து வைத்துக் கொண்டிருந்தாலும் கூட, உயிர் போகும் போது எல்லாவற்றையும் விட்டுவிட்டு, கொடுத்து விட்டுத் தான் போகிறோம், சிறிது கூட அதிலே எடுத்துக் கொண்டு போவதில்லை. இந்த உண்மையை உணர்ந்து கொண்டால் போதும். நினைத்துக் கொண்டால் போதும்.

உணர்ந்தாலும் சரி, உணராது போனாலும் சரி எந்தப் பொருள் எங்கே ஒட்டிக் கொண்டிருக்கிறது. உணர்ந்து விட்டால் உண்மையோடே இருக்கிறோம். உணராதபோது மயக்கத்திலே இருக்கிறோம். உணர்ந்தால் தெளிவு உணராவிட்டால் மயக்கம். ஆகையினாலே அந்த மயக்கத்தை விட்டு இந்த நிலையிலே இருந்து நான் பிறருக்கு எந்த அளவிலே உதவியாக இருக்க முடியும் என்று கணித்துக் கொள்ள வேண்டும்.

இறந்தபின் உயிரின் நிலை

இறந்தபின் மனிதனுடைய வினைப்பதிவுகள் என்னவாகிறது? இது பரவலாக நிலவி வரும் வினா. வினைப் பயன் விட்டுப் போகாது. ஒவ்வொரு உயிரும் தன் வினைப் பயனைத் தூய்மை பெறும்வரையில் வேறு உடலில் சேர்ந்தேனும், தன் வினைப்பயனாக துன்பத்தையோ, இன்பத்தையோ அனுபவித்தே தீரும். அதற்காகப் புதிதாகப் பிறவி எடுக்க வேண்டும் என்பதில்லை.

ஒரு குழந்தை பிறந்து அது தன் பன்னிரெண்டு வயது வரை தன்னிச்சையாக வினைகளைப் பெறவில்லை; பதிவுகளை ஏற்படுத்திக் கொள்ளவில்லை என்று வைத்துக் கொள்வோம். பன்னிரண்டு வயதிலே இறந்து விட்டது. இந்நிலையில் அக்குழந்தையின் உயிரின் நிலை என்ன? 12 வயதிற்குள்ளாக எந்தக் குழந்தை உயிர் விட்டாலும் தன், தாய் அல்லது தந்தை, பாட்டன், பாட்டி போன்ற கருத்தொடரான உறவினர்களின் உயிரோடு அடைக்கலமாகி விடும். விரிந்த உயிர் சுருங்கி விடுவதுபோல அவ்வுயிருக்கு வேறு எந்தப் பதிவும் இல்லை. ஆகவே அந்த உயிரில் பதிவு பெற்ற உயிர்கள் தாயும் தந்தையும்தான். எனவே, அவ்வுயிர் தாய், தந்தையரிடமே சேர்ந்து விடும். அவ்வுயிருக்கும் அமைதி ஏற்பட்டு விடும். பெற்றோர்களுக்கும் அக்குழந்தையை வளர்த்தமையால் அவர்களின் வினைகளும் ஒரு பகுதி கழிந்து விடுகின்றன. இவ்வாறு இருவர் வினைகளும் கழிந்த ஒரு கூற்றுதான் அக்குழந்தையின் முடிவு.

இறப்பிற்குப் பின் உயிரின் நிலை பற்றி நாம் பல கதைகளைச் சொல்லக் கேட்டிருக்கிறோம். இறந்த உயிர் வானுலகம் செல்லும். வானுலகத்தில் சொர்க்கம், நரகம் உண்டு. நல்வினை செய்த உயிர்கள் சொர்க்கத்திற்குச் சென்று இன்பமுறும். தீவினை செய்த உயிர் நரகம் சென்று அங்குள்ள நெருப்புக் கொப்பரையில் விழப்படச் செய்தும், செக்கிழுத்தும், பாம்பு, பூரான் போன்ற விஷ ஜந்துக்களாலும் துன்புறும் என்று கருடபுராணத்தில் கதை சொல்லப்பட்டுள்ளது. இவ்வாறு, மனிதனுக்கு அச்சமூட்டி, தவறுகள் செய்யாது இருப்பதற்காக, தீவினைகள் செய்யாது இருப்பதற்காக பல கதைகள் சொல்லப்பட்டு வந்தன. அக்காலத்தில் அவை நன்மையே அளித்து வந்தன.

இக்காலத்தில் இதை நம்புபவர்கள் இல்லை. இந்த விஞ்ஞான காலத்தில் சொர்க்கம், நரகம் என இரு உலகங்கள் பூமிக்கு மேல்புறமாக இருக்கிறது என்பதை நம்பவும் முடியாது. காலத்தால் அக்கதைகள் மறைந்து விட்டன. உண்மையான சிந்தனைக்குரிய, அறிவுக்குப் பொருத்தமான நல்ல கருத்துக்களை, நம் பழக்கத்தின் காரணமாக ஏற்றுக் கொள்ள சிரமமாக இருந்தாலும் உண்மையான கருத்துக்களை மனித குலத்தின் வாழ்வின் நலத்திற்காக வெளியிட்டுத் தான் ஆக வேண்டும். இவற்றை இன்றில்லையென்றாலும் பிற்காலத்தில் வரும் சிந்தனையாளர்களுக்கு இது மிகவும் அவசியம். மரணமென்பதை தெளிவாக உணர்ந்து கொள்ள வேண்டுமானால் உயிரினத்தில் அமைந்துள்ள கருமைய இரகசியங்களைத் தெளிவாக உணர்ந்து கொள்ள வேண்டும்.

அறிவின் உண்மை நிலை

உடலோ பல அணுக்களால் கட்டப்பட்ட ஒரு தோற்றம். அணுவோ எல்லாம் வல்ல அருட்பேராற்றலின் நுண்ணிய சுழலலை. அணுவினால் கட்டப்பட்ட தோற்றம் இந்த உடல். உடலுக்குள் அந்த நுண்ணிய பொருளாக உள்ள அணுவோ உயிர். அணுதிரட்சியில் உடலாகவும் இருக்கிறது. உயிருக்கு மத்தியில் தொடங்கி பேரியக்க மண்டலம் முழுவதும் விரிந்து எல்லையற்ற விரிவு உடைய ஒரு அரூபநிலையே அறிவு.

நீ உன் உடலை நினைத்துப் பார். நீ புலன்கள் வரையில் உன்னை எல்லை கட்டிக் கொண்டு உடலே நான் என்று எண்ணுகிறாய். உடலில் உள்ள உயிரை நினைத்து பார். உலகிலுள்ள எல்லா உயிர்களோடும் பேரியக்க மண்டலத்தில் ஆற்றல் களமாக நிறைந்துள்ள பரமாணு மண்டலத்தோடு ஒன்றுபட்டிருக்கிறாய். இந்த நினைவில் நீ ஆன்மாவாய் பேரியக்க மண்டலம் முழுவதும் பரவியுள்ள சக்தியாக உணர்கிறாய்.
அதற்கும் மேலாக நுணுகி நின்று உன் அறிவை நோக்கு. உயிராற்றலின் மையத்தில் தொடங்கி, உடலிலே பரவி பேரியக்க மண்டலம் முழுவதும் பரவி அதற்கு அப்பாலும் உள்ள பிரம்ம நிலையாய், சுத்தவெளியாய் உள்ளதை உணர்வாய். உனது அறிவின் உண்மை நிலையை உணர்ந்த பின் உனது அறிவின் விரிவே அன்பாக மலர்ந்து உயிர்கட்கு உதவி செய்து, உயிர்த் துன்பம் போக்கவும், எந்த உயிருக்கும் துன்பம் தராமல் செயலை ஒழுங்குபடுத்திக் கொள்ளவேண்டும், என்ற விழிப்பு நிலையும் வந்துவிடும்.

இந்த அறிவு நிலையிலேயே உன்னை உடலாகவும், உயிராகவும், அறிவாகவும் உணர்வாய். உனது அறிவு எல்லையற்றது, விரிந்து அரூபமாக உணரும் நிலையில் அறிவேதான் பிரம்மம் என்ற உண்மையை உணர்வாய்.

இந்த உள்ளொளியில் தன் முனைப்பு என்ற இருள் மறைந்துவிடும். ஒரு தலைப்பட்சம், வெறுப்புணர்ச்சி, பொறாமை, கடும்சொல் நீக்கி நீ உன்னை உத்தமப் பொருளான இறைவனாகவே காண்பாய். உன் அறிவை அறிந்த பேரறிவால் எந்த ஒன்றையும் குறிப்பால் உணர்ந்து தக்கபடி கடமையாற்ற முடியும்.

உன்னுடைய நிலையை உனக்கு உட்பொருளாக உள்ள ஆன்மாவை உணர்ந்து கொண்டால் உடல், உயிர், மனம் என்ற மூன்றையும் அறிந்து கொள்ளும் அறிவு உண்டாகும். அந்த அறிவைக் கொண்டு எவருள்ளத்தும் எழும் எண்ணங்களையும் செயல்களையும் உணர்ந்து தக்கபடி வெற்றியோடு உன் கடமையாற்றலாம். அகம் என்பது ஆன்மாவைக் குறிப்பதாகும். அது மனிதனுடைய கருமையத்தில் இறைநிலையையும் அதன் அளவற்ற ஆற்றலையும் சுருக்கி வைத்திருக்கும் தெய்வீக நிலையம்.

ஆன்மாவை உணர்ந்தவர் ஆன்மாவில் இயங்கும் அறிவை தெய்வமாக உணர்வார். ஆகையால் ஆன்மாவை அதன் இருப்பு, இயக்கம், விளைவு இவைகளை சிறிது கூட சந்தேகமின்றி உணர்ந்து கொள்ள வல்லவர் இறைவனாகவே மதிக்கப்படத்தக்கவர்.

கர்மயோகம்

கர்மம் என்றால் செயல், யோகம் என்றால் அற வாழ்வு என்று பொருள். மனத்தையும் செயலையும் ஒழுங்குபடுத்திக் கொண்டு, நல்ல முறையில் தனக்கும் பிறர்க்கும், இப்பொழுதும், பிற்காலத்திலேயும், தீமை எழாது, நன்மையே விளைவிக்கக் கூடிய முறையிலே செயல்கள் ஆற்றி வாழும் பண்புதான் அறம் எனப்படுகிறது. ஆகவே, கர்மயோகம் என்பது விளைவைத் தெரிந்து கொண்டு, வினைகளை முறைப்படுத்திக் கொண்டு, அறநெறியோடு வாழக் கூடிய ஒரு தவவாழ்வு இதைக் கடமை அறம் என்று சொல்லலாம்.

கர்மயோகம் என்ற சமஸ்கிருதம் சொற்றொடருக்குத் தமிழிலே கடமை அறம் எனப்பொருள் கொள்ளலாம். கடமை அறம் நன்றி உணர்வு, விளைவறிந்த விழிப்பு நிலை என்ற இரண்டு தத்துவங்கள் அடங்கியது. கர்மயோகத்தின் சிறப்பு என்னவென்றால், செயலினாலேயே நலம் காண வேண்டும் என்பதாகும். அதற்கு மனவளம் வேண்டும், உடல் நலம் வேண்டும். சமுதாயத்தில் ஒருவருக்கொருவர் கடமையைப் புரிந்து கொண்டு நலம் செய்ய வேண்டியது. இதுவே அறவாழ்வு கடமை அறம். இதுவே கர்மயோகம் எனப்படுகிறது.

எண்ணம் ஆராய்தல்

அன்பர்களே தீய எண்ணத்துக்கு ஒரு போதும் மனதில் இடம் அளிக்காதீர்கள். நல்ல எண்ணத்தைத் தேடிப்பிடித்து மனதில் ஏற்றிவையுங்கள். தீய எண்ணங்களளைக்கண்டு பயப்பட வேண்டும். நீங்களே முயற்சி செய்து ஒரு நல்ல எண்ணத்தைத் தொடர்ந்து மனதில் வைத்திருங்கள். தீய எண்ணம் வருவதற்கு இடமிருக்காது. எந்நேரமும் ஏதேனும் ஒரு சங்கற்பத்தை மனதில் சுழல விட்டுக் கொண்டிருந்தாலும் கூட தீய எண்ணத்தை விலக்கும். வாழ்க்கையின் அந்தந்த காலக்கட்டத்தில் ஏற்படும் பிரச்சினையை வெற்றி கொள்வதற்கான சங்கற்பமாகவும் அது இருக்கலாம். அல்லது வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கான பொதுவானதொரு சங்கற்பமாகவும் இருக்கலாம். அவ்வப்போது தோன்றும் எண்ணங்களையும் ஆராயுங்கள். விழிப்பு நிலை எண்ண ஆராய்ச்சியை வளப்படுத்தும். எண்ண ஆராய்ச்சி விழிப்பு நிலையை ஊக்குவிக்கும்.

எண்ணந்தான் அனைத்துமே. எண்ணத்துக்கப்பால் ஒன்றுமே இல்லை. நன்மையும் தீமையும் எண்ணத்துள்ளே சிறிதும் பெரிதும் எண்ணத்துள்ளே வெற்றியும் தோல்வியும் எண்ணத்துள்ளே. வெற்றியும் தோல்வியும் எண்ணத்தாலே பிரபஞ்ச இயக்கங்கள் அனைத்திலும் எண்ணந்தான் உயர்வானது. இன்பமோ, துன்பமோ எண்ணத்துக்கு அப்பால் இல்லை. எனவே அன்பர்களே எண்ணத்தின் தாழ்வு உங்கள் தாழ்வு. பிறகு யார் மீதும் குறை சொல்லிப்பயனில்லை. எண்ணத்தின் உயர்வு உங்கள் உயர்வு. எண்ணத்தில் உயர்வால் உலகுக்கும் உயர்வு. எண்ணத்தை ஆராய்ந்து எண்ணத்திற்கு உயர்வளித்து உங்களுக்கும் உலகுக்கும் உயர்வு கிடைக்கச் செய்யுங்கள்.

உடலுழைப்பு

மிதமான உடலுழைப்பு உடலுக்கு வலிவும் உள்ளத்திற்கு அமைதியும் அளிக்கின்றது. உடலில் கெட்டிப் பொருள் வெப்பப் பொருள், காற்றுப் பொருள், உயிர் ஆற்றல் ஆகிய ஐந்து நிலைகளும் கலந்து ஒன்றுக்குள் ஒன்றாக, ஒவ்வொன்றுக்குள்ளும் மற்றவை அனைத்துமாக இணைந்து ஊடுருவி ஓடி இயங்கிக் கொண்டிருக்கின்றன.

பூமியின் ஆகர்ஷ்ண சக்தியோடு ஒப்பிட்டுப் பார்த்தால் கெட்டிப் பொருளை விட, நீர்ப் பொருள் லேசானது, விரைவாக ஓடி இயங்கக் கூடியது. இது போன்றே வெப்பம், காற்று, உயிராற்றல் ஆகியவைகளும் ஒன்றை விட ஒன்று லேசானதும், விரைவாற்றலும் உடையனவாக இருக்கின்றது. பாதவாக இயற்கை ஒழுங்கமைப்பின் மூலம் இந்த ஐவகைப் பொருட்களும் சில அளவில் மீறிய இயக்கவிரைவு பெற்று உடலை விட்டுப் பிரிந்து ஓடிக் கொண்டேயிருக்கும். அந்த இயற்கை நியதிக்கு ஒத்த முறையில் நமது உடலை அசைத்து இயக்கிக் கொண்டிருந்தால் தான் எல்லா சக்திகளும் முறையாக ஒழுங்காக ஓடிக் கொண்டிருக்கும் உடலும் நலமுடன் இருக்கும் அசைவு குறைவாகவோ, அசைவே இல்லாமலோ இருந்தால் பூமி பக்கமான இழுப்பாற்றல் ஒரு குறிப்பிட்ட பகுதியில் இரத்த தேக்கத்தை உண்டு பண்ணும், நாளா வட்டத்தில் அந்தப் பகுதி அணு அடுக்கு செயல் விரைவு குறைந்து இரத்த, வெப்ப, காற்று, உயிர் ஓட்டங்களுக்குத் தடை ஏற்படும் எனவே உடலை எப்போதும் முறையான இயக்கத்தில் வைத்துக் கொண்டிருக்க வேண்டும்.

சமுதாய மக்கள் உழைப்பினால் எல்லா வாழ்க்கை வசதிகளையும் பெற்று வாழும் ஒவ்வொரு மனிதனும் அந்த சமுதாய நலன்கள் வரண்டு போகாமலிருக்க தன் உழைப்பால் பொருளுற்பத்தியோ அல்லது தொண்டோ செய்து கொண்டுதான் இருக்க வேண்டும். இல்லையேல் சமுதாய நலம் வரண்டு போகும். வாழ்வில் அமைதி கிட்டாது.

எனவே உடலுழைப்பின் மூலம் தனது இரத்த ஓட்டத்தை ஒழுங்குசெய்து உடல் நலத்தை பேணிக் கொள்ள முடிகிறது. சமுதாயத்திற்கும் கடமை செய்ய முடிகிறது. மித மிஞ்சிய உழைப்பு உடல் நலத்தைக் கெடுக்கும். உடலுழைப்பு இல்லாமல் அறிவைக் கொண்டு சமுதாயத்திற்கு தொண்டாற்றித் தொழில் புரிந்து வாழ்பவர்கள் முறையான உடல் பயிற்சியின் மூலம் இக்குறையை ஈடு செய்து கொள்ளலாம்.
ஆசனப் பயிற்சிகள் பல இருக்கின்றன. அவரவர்கள் தொழிலுக்கு ஏற்றபடி உடலுழைப்பை ஈடு செய்ய ஏதேனும் சில முறைகளைத் தேர்ந்தெடுத்துப் பயிற்சி செய்து வருவது நல்லது. பல கோணங்களில் உடலை வளைத்து நிறுத்தும்போது உடலில் புவிஈர்ப்பு நிலை வேறுபடுகிறது. இதன் மூலம் உடலியக்கம் ஊக்குவிக்கப்படுகிறது.

உடலில் உள்ள சுரப்பிகள் நன்கு தொழில் புரியத் தூண்டப்படுகின்றன. இதன் மதிப்பை மாக்கோலக் கவியில்

"உழைப்பினால் உடலும் உள்ளமும்
உலகமும் பயன்பெறும் உணர்வீர்."

என்று விளக்கியிருக்கிறேன்.

வெட்டவெளி இரகசியம்

ஒரு கண்ணாடியில் உருவம் தெரிகின்றது. ஒரே உருவம் அதைச் சுற்றி எத்தனை கண்ணாடிகளிலிருந்தாலும் அவை அனைத்திலும் பிரதிபலிக்கும். இதனால் உருவம் கண்ணாடிக்குப் போகின்றது என்பதில்லை. பிரதிபலிப்பேயாகும்.

இதே போன்று ஒளி, ஒலி என்ற இரண்டும் அணுவை விட்டு வெளி÷றுவதில்லை. ஒரு அணுவிலோ அல்லது அணுக்கூட்டத்தாலாகிய எந்த அளவான உருவத்திலோ ஏற்படும் ஒளி, ஒலி இவைகள் சுற்றியுள்ள அணுக்களிலும், அணுக்கூட்டத்தாலாகிய உருவங்களிலும் பிரதிபலிக்கின்றன.

பிரதிபலிக்கும் தன்மை அணுவுக்கு இயல்பு. ஆகையால் எந்தப் பிரதிபலிப்பும் ஒரு தொடரியக்கமாகிப் பிரபஞ்சம் முழுவதுக்கும் வியாபித்து விடுகின்றது. பிரதிபலிப்பில் உள்ள வேகமும், பிரதிபலிக்கும் செயலம் இடைவெளியாக உள்ள, எங்கும் நிறைந்த பேராதாரப் பெருவெளியில் அமைந்திருக்கின்றன.

ஒரு நூலில் கோர்க்கப்பட்ட பல மணிகள் போல் ஏகவெளியால் எல்லாப் பொருட்களும் இணைந்து இருக்கின்றன. அறிவு என்ற ஒரு இயக்கமும் இதே போல் மூளைக்கு அப்பால் வெளிச் செல்வதில்லை. பிரபஞ்சத்தில் நடைபெறும் எந்த நிகழ்ச்சியும் மூளையிலேயே பிரதிபலிக்கின்றது, அறிவின் யூக வேக அளவுக்கு ஏற்றபடி காட்சியாகின்றது. ஒரு மூளையில் நடைபெறும் அறிவியக்கம் அதே அளவான ரசாயன அமைப்புப் பெற்ற எல்லா மூளைகளுக்கும் பிரதிபலிக்கின்றது.
ஆனால் பழக்கம், தேவை, திறமை, நுட்பம் என்றவைகளுக்கு ஏற்ப அறிவிற்கு அது காட்சியாகின்றது. எல்லாப் பொருட்களும் தோன்றக் காரணமாகவும் இருக்க இடமாகவும் அவைகளைத் தாங்கும் இயக்கும் சக்தியாகவும், ஒளி, ஒலி, அறிவு என்ற மூன்று விதமான எழுச்சி இயக்கத்தைப் பிரபஞ்சம் முழுவதுக்கும் வியாபிக்கச் செய்யும் பெரு வல்லமைப் பொருளாகவும் இருந்து கொண்டு பொருள் என்றே கூற முடியாதபடி புலன்களுக்கெட்டாமல் தான் அசையாத் தன்மையதாய் உள்ள போராதாரப் பெருவெளியில், அறிவுக்கு இது வரையில் எட்டியவைகளாகவும், இன்னும் எட்டாதவைகளாகவும் உள்ள எல்லா ரகசியங்களும் அடங்கியுள்ளன.

வேதாந்தம்

உலகில் மனித இனம் தோன்றி, உண்டு உறங்கி உலாவி அறிவு சிறிது வேகங்கொண்ட போது, அவனுடைய சிந்தனை முதலில் நாம் அடையும் இன்பத்திற்கு நம் வாழ்விற்கு ஆதாரமானது எது? என நாடியது.

அதன் விளைவாக உணவு தான் வாழ்விற்கு ஆதாரம் என்று கண்டான். அதுவே அவனுக்கு வாழ்வையளிக்கும் பெரும் பொருள் என்று கொண்டான். இறை என மதிக்கக் கூடியது, அதுவே நம் அனைவருக்கும் ஆதாரம், மூலம் என அனைவருக்கும் அறிவித்தான்.

மேலும் சிந்தனை வேகம் அதிகரித்தது. உணவு தான் நம் வாழ்விற்க ஆதாரம் எனினும் அது எங்கிருந்து தோன்றுகிறது என ஆராய முற்பட்டான். பூமியே உணவை அளிக்கும் ஆதாரப் பொருள் எனக் கண்டான்.

மேலும் சிந்தனை சக்தியால் ஆராய்ந்தான், தண்ணீர் இல்லாவிடில் உணவு பூமியில் உற்பத்தியாகாது ஆகவே மனிதனின் உணவு, பூமி இவற்றிற்கெல்லாம் தண்ணீர்தான் ஆதாரப் பொருள் என உணர்ந்தான். பின்னர் மேலும் மேலும் ஆராய்ந்து வெட்ப, தட்ப நிலைகளின் மாறுபாட்டினால் தான் மழை பெய்கிறது. தண்ணீரைவிட கனல் தான் பெரிது என்றும் பின்னர் அணுக்கூட்டச் சேர்க்கை, உருவமாகாத முன் கூடி சுழன்று, மோதி, இயங்கும் காற்றையும் அதற்கும் மேலான அணுவையும் அறிந்து கொண்டான்.

யூக வேகம் அதிகரித்து அணுவைக் கடந்தும் அணுவைத் தாங்கியும் அணுவுக்கு மூலமாகவும் உள்ள வெட்டவெளி என்ற சூனிய தத்துவத்தைக் கண்டான். இதுவரை விரிந்து கொண்டே வந்த ஆராய்ச்சி இங்க முடிவு பெற்றுவிட்டது.

இந்த விளக்கங்களின் தொகுப்பு தான் வேதாந்தம். அதாவது நிலம், நீர், அனல், காற்று, அணு, வெளி என்ற ஆறு தத்துவங்களையும் உடல், உணவு, அறிவு இவற்றையும் முறைப்படுத்தி எழுதிய விளக்கம் வேதாந்தம்.

உலக சமாதானம்

ஒவ்வொரு மனிதனும் உடலுக்கும் அறிவிற்கும் அவ்வப்போதைய தேவைக்கும் பொருத்தத்திற்கும் ஏற்ப அனுபோகங்களை நாடுகின்றார்கள், தேடுகின்றார்கள், அனுபோகிக்கின்றார்கள். இன்ப துன்பங்களை அடைகின்றார்கள். ஆராய்கின்றார்கள். அனுபவ ஞானம் பெறுகின்றார்கள்.

எனினும் எங்கேனும் எப்போதேனும் மேலே சொன்னவைகளில் மனிதனால் மனிதனுக்குத் தடையோ, செயல் போட்டியோ ஏற்படின் பன்னெடுங்காலம் ஐயுணர்வின் நிலையில் செயல்பட்டு அடங்கியுள்ள உணர்ச்சி வேகம் மீறி காமம், குரோதம், லோபம், மோகம், மதம், மாச்சரியம் என்ற அறுகுண எழுச்சிகளாகி அவ்வக்காலச் சூழ்நிலை பலத்திற்கு ஒருவரையொருவர் துன்புறுத்தும் கொடுஞ் செயல்கள் நிகழ்கின்றன.

அறிவிலும் பண்பிலும் உயர்ந்து வரும் மனித இனம் உலக மக்கள் அனைவருக்கும் உடலியக்கத் தேவைகளான தொழில், உணவு, உடை, இடம், வாழ்க்கைத் துணை இவைகளையும், அறிவியக்கத் தேவைகளான கல்வி, ஒழுக்கம், சிந்தனை சூழ்நிலை இவைகளையும் சமுதாயக் கூட்டு முறையில் குறைவுபடாமல் பெற்று அனுபவித்து வாழ வழி கண்டுவிட்டால் அன்றே மனித இனத்தில் தனிமனிதன் வாழ்வில் சமாதானமும் அதை அடிப்படையாகக் கொண்டு உலக சமாதானமும் ஏற்படும்.